இரவில் நீண்ட நேரம் கண் முழிப்பது எனக்கு ஒரு வியாதியகவே ஆகிவிட்டது. அமெரிக்கா வந்ததிலிருந்து 1 மணிக்கு முன் படுத்துத் தூங்கியதாக நினைவில் இல்லை. இந்தியாவில், இரவு 2 மணிக்கு இன்டர்நெட்டில் உலவும் போது, என் நண்பர்கள் "இப்போவே US டைமிங்க்கு பழகிக்கிறியா?" என்று கிண்டலடிப்பார்கள்.. இப்போது அமெரிக்கா வந்து கூட, அந்த பழக்கம் மாறவில்லை. லேப்டாப் இல்லாமல் அமெரிக்காவில் ஒரு வாழ்க்கையை கற்பனை கூட செய்து பார்க்க முடியவில்லை. அமெரிக்க வாழ் இந்தியர்களுக்கென்றே சில வலைத்தளங்கள் கிரிக்கெட் மேட்ச் முதற்கொண்டு, சன் டிவி, ராஜ் டிவி என்று அனைத்தையும் ஒளிபரப்புகின்றன. இந்தியா பங்கேற்கும் போட்டி என்றில்லை... இங்கிலாந்து கவுன்டி கிரிக்கெட் முதல் நம்மூர் தெரு கிரிக்கெட் வரை, எந்த மேட்சை ஒளிபரப்பினாலும் ஆர்வத்துடன் பார்க்கும் ஜாதி நான். இரவு 2 மணி(குறைந்தபட்சம்) வரை இன்டர்நெட்டில் படம் அல்லது கிரிக்கெட் பார்ப்பது வாடிக்கையாகி விட்டது. என்னுடைய டிவி, கம்ப்யூட்டர், மியூசிக் சிஸ்டம், ஹோம்-தியேட்டர், எல்லாமே என் லேப்டாப் தான்...
காலை 9 மணிக்கு திருப்பள்ளி எழுச்சி. வீட்டிலிருந்து ஆபீஸ் ஒன்றரை மைல் தூரம் தான் என்பதால், 9.45 க்கு வீட்டை விட்டுக் கிளம்பினால் போதும். 10 மணிக்குள் ஆபீஸ் சென்றடைந்து விடலாம். காலையில் - (ஒருவேளை சாப்பிட்டால்) , 1 பவுல் கார்ன் ஃபிளேக்சுடன் பால். மதிய உணவிற்கு மேகி நூடுல்ஸ் அல்லது நேரம் இருந்தால் காலையிலேயே சப்பாத்தி போட்டு எடுத்து டிபன் பாக்ஸில் வைத்துக்கொள்வேன். மேகி நூடுல்ஸ் என்றால், ஆபீசிலேயே மைக்ரோவேவில் வைத்துக்கொள்ளலாம்.
ஆபிஸில் செய்யும் முதல் வேலை http://www.cricinfo.com/ - வலைத்தளத்தில் இருக்கும் செய்திகளையும் கட்டுரைகளையும் ஒரு வார்த்தை கூட விடாமல் படிப்பது. இந்தியாவில் இருந்தவரை தினமும் பேப்பர் படிக்கும் பழக்கம் இருந்ததில்லை. இங்கு வந்தவுடன் நம் நாட்டு நடப்பை தெரிந்து கொள்வதில் ஆர்வம் அதிகமாகியது. என்னதான் CNN IBN நியூஸ் சேனல் பார்த்தாலும், தமிழ் பேப்பர் படித்த திருப்தி எதிலும் கிடைப்பதில்லை. அதனால், தினமலர் நாளிதழை ஆன்லைனில் ஒரு அலசு அலசுவேன். இவை எல்லாம் முடிந்த பிறகு தான் என் நாளே தொடங்கும்....
ஆபீஸ் முடிந்து இரவு 7 மணி வாக்கில் வீடு திரும்புவேன். இரவு தான் என்னுடைய சமையல் திறமையைக்(?) காட்ட முடியும். "பச்சை மிளகாய் cutter"ஆக என் சமையல் career-ஐத் தொடங்கிய நான், படிப்படியாக முன்னேறி தக்காளி, வெங்காயம் ஆகியவற்றை நறுக்க கற்றுக்கொண்டதுடன் தனியாக ஆம்லெட் மட்டுமே போட கற்றுக்கொண்டிருந்தேன். முழு சமையலையும் நான் செய்ததே இல்லை. நேற்று முழுக்க முழுக்க நானே சமைக்க வேண்டும் என்ற முடிவில் முருங்கக்காய் சாம்பாரும், பாவக்காய் வறுவலும் செய்ய முடிவு செய்தேன். அதன்படி, நறுக்கிய பாவக்காய், முருங்கக்காய் ஆகியவற்றை வாங்கி வந்து, தெம்புடன் சமைக்க ஆரம்பித்தேன். முதல் படியாக, கொஞ்சம் பருப்பை எடுத்து குக்கரில் போட்டு, அதில் தண்ணீரை ஊற்றி, அடுப்பில் வைத்தேன். குக்கரின் விசிலுக்கு அருகிலிருக்கும் ஓட்டையின் வழியாக ரயில் வண்டி போல புகை வந்துகொண்டே இருந்தது. இதற்கு முன்னால் அந்த இடத்தில் ஓட்டை இருந்ததா என்று கூட சரியாக தெரியவில்லை. நெடு நேரம் ஆகியும் விசில் சத்தம் வரவே இல்லை. என்னுடன் தங்கியிருக்கும் குஜராத்தி பையனும் ஏதோ சமைத்துக்கொண்டிருந்தான். குக்கர் இப்படி புகைவதைப் பார்த்து, என்னிடம் "Anything wrong?" என்று கேட்டான். ஏதோ வித்தியாசமாக இருக்குமோ என்று எனக்கு தோன்றினாலும், "No, that's perfectly fine" என்று கூறி விட்டு, பாவக்காய் வறுவல் செய்வதற்கு ஆயத்தமானேன். நீண்ட நேரம் ஆகியும் விசில் சத்தம் வரவில்லை என்று நான் சொன்னதும், அடுப்பை ஆப் செய்து விட்டு, குக்கரை திற என்று போனில் என் பிரெண்ட் சொன்னாள். திகிலுடன் குக்கரை திறந்து பார்த்த போது, கருகிய வாடை அடித்தது! தண்ணீர் குறைவாக இருந்ததால், அது அடிபிடித்து, கருகிவிட்டிருந்தது! குக்கரின் சேஃப்டி வால்வை வேறு காவு கொண்டுவிட்டது. சேஃப்டி வால்வு உடைந்து தான் அங்கே ஓட்டை விழுந்திருக்கிறது என்று அவள் சொல்லிதான் தெரிந்தது! சத்தியமாக குக்கரை திறக்கும் வரை எனக்கு எந்த வாடையும் வரவே இல்லை! இருந்தாலும், மனம் தளராமல், குக்கரைக் கழுவிவிட்டு, மீண்டும் கொஞ்சம் பருப்பு, நிறைய்ய்ய்ய்ய தண்ணீர் வைத்து வேக விட்டேன். சேஃப்டி வால்வு உடைந்ததால் குக்கரை மூடி வைத்து பலனில்லை என்று அவள் சொன்னதன் பேரில், திறந்தே வைத்தேன்...
நிற்க. எனக்கு சமைக்கவே தெரியாது. என்னுடைய ஃபிரெண்ட் நித்யா, போனில் பாவக்காய் ஃபிரை எப்படி செய்வது என்று சொல்ல சொல்ல, அப்படியே செய்தேன். நடுவில், "கொஞ்சம் உப்பு போடு" என்று அவள் சொல்லும்போது, "கொஞ்சம்னா? எவ்வளோ?" என்று கேட்டேன். "உப்பு அளவெல்லாம் இங்கேயிருந்து சொல்ல முடியாது, நீயே ஒரு அளவா போடு" என்றாள். மீண்டும் ஒரு முறை, உப்புக்கு அளவு கேட்ட போது, "டேய், இனிமே உப்புக்கு அளவு கேட்டேன்னா கொன்னுடுவேன்" என்று மிரட்டினாள். நானும் ஏதோ குத்துமதிப்பாக உப்பு போட்டேன். கடைசியில், பாவக்காய் ஓவராக பிரை ஆகி, கருகி விட்டிருந்தது... அது சாப்பிடும் போது தான் தெரிந்தது! :(
பாவக்காய் சொதப்பினாலும், சாம்பார் மட்டும் ஏதோ ஜஸ்ட் பாஸ் ஆனது! ஆனால், இந்த குக்கிங் ப்ராசெஸ் முழுவதும்(கிட்டத்தட்ட 2 மணிநேரம்) என்னை பொறுமையாக வழி நடத்திய என் ஃபிரெண்ட் நித்யாவிற்கு நன்றி!
"தோல்வி தான் வெற்றியின் முதல் படி" - அடுத்த முறை நான் சமைக்கும் போது பட்டையை கிளப்புவேன் என்று நம்பிக்கை இருக்கிறது....
வார கடைசியில் கிரிக்கெட், அல்லது எங்கேயாவது ஊர் சுத்துவது என்று நாட்கள் கழிகிறது. மேலும் பல சுவாரஸ்யமான செய்திகளுடன், அடுத்த "அமெரிக்கா டைரி" யில் சந்திப்போம்.