Showing posts with label 'சேட்டை'ய ராஜாக்கள். Show all posts
Showing posts with label 'சேட்டை'ய ராஜாக்கள். Show all posts

Wednesday, November 05, 2008

'சேட்டை'ய ராஜாக்கள் - 27

ஷங்கர் சொன்னதை தீவிரமாக யோசித்த பாபு, மறுநாள் காலையில் எப்படியும் அவரிடம் இன்று கேட்டு விடுவது என்று முடிவு செய்தான். நட்டு மற்றும் பாலாவை அருகில் வைத்துக்கொண்டு தான் பேச வேண்டும் என்று நினைத்திருந்தான். விபரீதமான விளைவுகள் ஏற்பட்டால், அதைப் பகிர்ந்து கொள்ளலாம் என்கிற நல்லெண்ணம் தான்!

'மிட்-டெர்ம்'இல் தேறாதவர்களுக்கு கட்டாயமாக, அந்தந்த பாடங்களில் டியூஷன் நடைபெறும். விருப்பம் இல்லையென்றாலும், அதில் சேர்ந்து தான் ஆக வேண்டும். தினமும் மாலை, பள்ளி முடிந்தவுடன் 5 முதல் 6.30 வரை நடைபெறும் இந்த சிறப்பு டியூஷனுக்கு, ஒரு மாணவருக்கு 100 ரூபாய் வீதம், அந்த ஆசிரியருக்கு சம்பளமாக அளிக்கப்படும். இதிலே செல்வம் சார் நன்றாக காசு பார்த்துக் கொண்டிருந்தார்.


அவரைப் புரிந்து கொள்ளவே முடியவில்லை. பள்ளியில் சேர்ந்த புதிது வேறு. "சார், டியூஷன் எடுக்குறீங்களா?" என்று கேட்டால், "க்ளாஸ்- நான் எடுக்குறது புரியலையா?" என்று கேட்டு, திட்டம் 'பேக்-பயர்' ஆகிவிட்டால் என்ன செய்வது என்றும் யோசனையாக இருந்தது. முதல் நாளே அவர் அப்படி நடந்துகொண்டு கலவரப்படுத்தியது அவன் கண் முன் நிழல் போல வந்து போனது. நட்டு வேறு அருகிலிருந்து அதை ஞாபகப்படுத்திக்கொண்டிருந்தான்.


"இதையெல்லாம் கரெக்டா ஞாபகப்படுத்து" என்று கடிந்துகொண்டான் பாபு.


போலீசிடம் நேரடியாக லஞ்சம் வாங்கிக்கொள்ளுங்கள் என்று சொல்ல முடியாமல் தவிக்கும் பொதுஜனம் போல, மெல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் தவித்தான் பாபு . ஒருவேளை, அவர் மேடத்திடம் போட்டுக்கொடுத்து விடுவாரோ என்றும் பயமாக இருந்தது. காலை முதல் வகுப்பே 'பிசிக்ஸ்' என்பதால், அனைவரும் திகிலோடு காத்திருந்தனர். 'டெரர்' மாதிரியே ஆரம்பித்தார்....


வந்ததும் வராததுமாய், முதலில் ஒரு 'கேள்வி நேரம்'. ஒரு கேள்வியைக் கேட்டுவிட்டு, ஒவ்வொருவராக எழுப்பி விடை கேட்பார். தெரியாதவர்கள் எல்லாம் மௌனமாக நிற்க, தெரிந்தவர்கள் மட்டும் பதில் கூறுவார்கள். அந்த கேள்விக்கான பதிலை ஒருவர் கூறிவிட்டால், அடுத்த கேள்வி கேட்கப்படும். இது தான் கேள்வி நேரம். முதல் 15 நிமிடங்கள் இதிலே கழிந்துவிடும். பதில் தெரியாதவர்களுக்கெல்லாம் ஒரு அடி கொடுத்துவிட்டு அமர வைப்பார்.


அடுத்த சுற்று, 'ஹோம்-வொர்க்' சுற்று. இந்த சுற்றிலும் இதே மாதிரி தான். வீட்டுப்பாடம் எழுதாதவர்களுக்கு, அவர் பிரம்பில் இரெண்டு அடி விழும். அவர் கொடுக்கும் வீட்டுப்பாடத்திற்கு, அந்த இரெண்டு அடிகளே மேல் என்பதால், அனைவரும் பொதுக்குழுவில் கூடி, அதைப் புறக்கணிப்பது என்று முடிவெடுத்திருந்தனர். இந்த வகுப்பில் மட்டுமின்றி, 'கம்ப்யூட்டர்' வகுப்பிற்கும் இது பொருந்தும்.


அவர் அணிந்திருக்கும் மோதிரத்தினால், மேஜையின் மீது 'டொக் டொக்' என்று தட்டுவார். தட்டிவிட்டு, "ஒய் ஆர் யூ ஷௌட்டிங் பாய்?" என்று ஸ்டைலாக(?) மாணவர்களைப் பார்த்து திருநெல்வேலி இங்கிலிஷில் கேட்பார். இதுவே அவரது வழக்கமாக இருந்தது.


பாலாவிடம், "டேய், ஒரு விஷயம் கவனிச்சியா??" என்றான் நட்டு.


"என்னடா?"


"எப்பவுமே இவரு க்ளாஸ்-ல எல்லாரும் சத்தம் போட்டுக்கிட்டு இருந்தாலும், வலது பக்கம் மட்டும் திரும்பி "ஒய் ஆர் யூ ஷௌட்டிங்?"ன்னு கேக்குறாரே... ஏன் டா?" என்றான்.


"உனக்கு மட்டும் எப்படி இப்படியெல்லாம் தோணுது?" என்று கேட்டு வழக்கம்போல் அவனை அசிங்கப்படுத்தினான் பாலா.


முதல் சுற்றுக்கும் இரெண்டாவது சுற்றுக்கும் கொஞ்சம் இடைவெளி விட்டிருந்தார் செல்வம். அந்த 'கேப்'பில் அவர் பாபுவிற்கு அருகில் வந்தபோது,


"சார்" என்று அழைத்தான் பாபு.


அவர், "என்ன?" என்பதைப்போல் பார்த்தார்.


அப்போது, தயங்கித் தயங்கி "நீங்க தனியா டியூஷன் எடுக்குறீங்களா சார்?" என்று, நீண்ட நேரம் யோசித்து வைத்திருந்ததை ஒரு வழியாகக் கேட்டே விட்டான்.


என்ன நடக்கப்போகிறதோ என்று பயந்துகொண்டிருந்தான். ஆனால், அவர் பதிலேதும் சொல்லாமல், பாபுவை ஆழமாகப் பார்த்துவிட்டுக் கடந்து சென்றார்.


அவர் பதில் கூறாதது, பாபுவை மேலும் கவலையில் ஆழ்த்தியது.


இரெண்டாவது சுற்று ஆரம்பித்தது. 'ஹோம்-வொர்க்' எழுதாதவர்களை வரிசையாக அடித்துக் கொண்டே வந்தார். பாபுவிடம் வந்ததும், அவனையும் அவன் பெஞ்ச்சில் அமர்ந்திருந்த நட்டு மற்றும் பாலாவையும் அடிக்காமல், "கம் அண்ட் மீட் மீ இன் த ஸ்டாஃப் ரூம்" என்று கூறிவிட்டு சென்றார். மூவருக்கும் வயிற்றில் புளியைக் கரைத்தது.


முதல் வகுப்பு முடிந்தவுடன், பக்கத்து கிளாசிலிருந்து, ஷங்கர், குமார் மற்றும் கிருஷ்ணா ஆகியோர் எதிர்பார்ப்புடன் ஓடி வந்தனர்.


"என்னடா நடந்தது?" என்று பாபுவிடம் ஆர்வமாகக் கேட்டான் ஷங்கர்.


நடந்ததையெல்லாம் கூறினான் பாபு.


"கேட்டவன் இவன். இவனை மட்டும் கூப்பிடாம, எங்க ரெண்டு பேரையும் கூப்பிட்டாரு டா..." என்று கவலையுடன் கூறினான் பாலா.


கிருஷ்ணா, "ஏதாவது எடுபிடி வேலைக்கு கூப்பிட்டிருப்பார். உங்க ரெண்டு பேர் மூஞ்சிலேயும் அந்த களை இருக்கு" என்று வெறுப்பேத்தினான்.


கடுப்பான பாலா, கிருஷ்ணாவை அடிக்க முயல, கிருஷ்ணா ஓடினான். துரத்திக்கொண்டு பாலாவும் பின்னால் ஓட, இரெண்டு வகுப்புகளுக்கும் நடுவில் போடப்பட்டிருந்த 'ஸ்க்ரீன்' எனப்படும் கார்டுபோர்டு தடுப்பின் மீது பாலா மோதியதில், அது கீழே விழுந்தது.


பக்கத்து கிளாசில் அது சாய, நல்லவேளையாக யார் தலையிலாவது அது விழும் முன், அதைத் தாங்கி பிடித்தனர். ஒரு புறத்தை மட்டும் அந்த மாணவர்கள் தாங்கிப்பிடித்திருக்க, மறுபக்கத்தை ஷங்கர், குமார் ஆகியோர் பிடித்து அதை நிமிர்த்தினார்.


யாருக்கும் ஒன்றும் ஆகவில்லை என்பதை உறுதி செய்துகொண்டபின்னரே, கிருஷ்ணாவும் பாலாவும் மூச்சு விட்டனர்.


அதை ஒழுங்கு படுத்திவிட்டு நிமிர்ந்து பார்க்கையில், செல்வம் சார் அங்கு நின்றுகொண்டிருந்தார். ஒரு நிமிடம் பாலாவும் கிருஷ்ணாவும் ஆடிப்போய் நின்றனர். அவர் எப்போது அங்கு வந்தார் என்று யாருக்கும் விளங்கவில்லை.


எப்போதுமே டெரராக இருக்கும் அவர், அப்போது சாந்தசொரூபியாகக் காட்சியளித்தார். அமைதியாக நடந்து வந்து, அவர்கள் மூவரையும் அழைத்து, "கம் டு த ஸ்டாஃப் ரூம்" என்று கூறிவிட்டு சென்றார்.


அவர் அப்படி சொல்லிவிட்டு சென்றதும், பலவித எண்ணங்கள் அவர்களுக்குத் தோன்றின.


"நேரா மேடம் ரூமுக்கு தான்" என்று கிசுகிசுத்தான் பாலா.


"டேய், மூடிக்கிட்டு வா" என்று அவனைத்திட்டினான் பாபு.


'ஹட்ச்' நாய் போல, மூவரும் செல்வம் சாரைப் பின் தொடர்ந்து சென்றனர். அவர் டெரரா, காமெடியா என்கிற கேள்வி மறுபடியும் எழுந்தது.....


தொடரும்...

Wednesday, October 29, 2008

'சேட்டை'ய ராஜாக்கள் - 26

அடுத்த ஒரு வாரத்திற்கு, இந்த 'நாற்காலி வீசப்பட்ட' சம்பவம் தான் அனைவரின் பேச்சாக இருந்தது. அந்த சம்பவத்தைப் பார்த்தவர்கள் எல்லாரும் 'பிசிக்ஸ்' சார் ஒரு டெரர் என்று நினைத்துக்கொண்டனர். கிளாஸ் எல்லாம் பிரிக்கப்பட்டு, 'பயாலஜி' குரூப்பிற்கு 'பிசிக்ஸ்' வாத்தியாராக சென்றார் செல்வம். தங்களுக்கு வராததை நினைத்து, பெருமகிழ்ச்சி அடைந்தனர் 'கம்ப்யூட்டர்' குரூப் மாணவர்கள்.


"நாங்க செம எஸ்கேப்..... எங்களுக்கு பூங்கொடி மிஸ் தான்" என்றான் குமார்.


"நாங்க நல்லா மாட்டிக்கிட்டோம் டா... அந்த ஆளு முதல் நாளே இப்படி நடந்துகிட்டாரு.... க்ளாஸ்ல இன்னும் என்னென்ன பண்ணுவாரோ?" என்றான் நட்டு.


"எனக்கென்னவோ, அந்த ஆளைப் பார்த்தா டெரர் மாதிரி தெரியல. நிச்சயமா அவரு காமெடி தான்" என்றான் ஷங்கர்.


"எப்படி சொல்லற?"


"ஒரு காமெடியனுக்கான களை அவரு மூஞ்சில தெரியுது"


"போகப் போகத்தான் தெரியும்" என்றான் பாபு.


+1 வந்துவிட்டாலே, சம்பிரதாயமாக அனைவரும் டியூஷனில் சேருவது வழக்கம். டியூஷனுக்கென கும்பகோணத்திலேயே பிரபலமான ஆசிரியர்கள் இருந்தார்கள். அவர்களிடம் எப்போதுமே கூட்டம் அலைமோதும். ஒவ்வொருவர், ஒவ்வொரு வாத்தியாரின் பெயரை சொல்லிக்கொண்டிருந்தனர்.


"டியூஷனுக்கேல்லாம் போகணுமா? +1 எதுக்கு டா டியூஷன்?" என்றான் ஷங்கர்.


"இப்போ போகலேன்னா, +2 இடம் கிடைக்காது டா" என்றான் பாபு.


"அது மட்டுமில்ல..... எல்லாருமே சேர்றாங்க. வாரத்துல 3 நாள் தான்" என்றான் கிருஷ்ணா.


"சரி. எல்லாரும் சேர்ந்து போகலாம். அப்போ தான் ஒரே பேட்ச்ல இடம் கிடைக்கும்".


முதலில் கெமிஸ்ட்ரி டியூஷன். பள்ளி முடிந்தவுடன், அனைவரும் சேர்ந்து ஹரிஹரன் என்கிற கெமிஸ்ட்ரி வாத்தியாரின் வீட்டிற்கு சென்றார்கள். இவர்களுக்கு முன், அங்கே ஒரு பெரிய கும்பல் காத்திருந்தது. வீட்டு வாசலின் முன், ஏகப்பட்ட சைக்கிள்கள் நின்று கொண்டிருந்தன. டியூஷன் வகுப்புகள் தொடங்கப்படுவதையொட்டி, அவர் வீட்டின் முன் தனியாக ஒரு கொட்டகை போடப்பட்டிருந்தது.


ஹரிஹரன் - கும்பகோணம் ஆண்கள் கல்லூரியில் வேதியல் புரொபசர். நெற்றியில் மின்னிக்கொண்டிருந்த பட்டை, அவரை 'ஐயர்' என்று அடையாளம் காட்டியது. நரைத்த மீசை, தலையில் தாராளமாய் வெற்றிடம், மூக்கின் விளிம்பில் ஒரு கண்ணாடி என்று தோற்றமளித்தார். அவரைப் பார்த்தாலே, மாணவர்கள் அவர் தலையில் மிளகாய் அரைத்துவிடுவார்கள் என்று தெரிந்தது. வருபவர்களையெல்லாம் சிரித்த முகத்தோடு வரவேற்றுக் கொண்டிருந்தார்.


இடம் கிடைக்காததால், இவர்கள் ஆறு பேரும் கடைசி வரிசையில் சென்று அமர்ந்தனர். அந்த கொட்டகை முழுவதும் நிரம்பியவுடன்,


"வருஷத்துக்கு 850 ரூபாய் பீஸ். அதை முதலிலேயே குடுத்துடணும்" என்று தன் பேச்சை ஆரம்பித்தார்.


"காசுல குறியா இருக்கார்..." என்றான் குமார்.


"அவர் தலையைப் பாத்தாலே தெரியுது, பல பேர் அவருக்கு நாமம் போட்டிருக்கங்கன்னு.... அதான் உஷாரா இருக்காரு" என்றான் பாலா.


ஒவ்வொருவராகக் கூப்பிட்டு, அவர்களது பெயர், பள்ளியின் பெயர் மற்றும் தொலைபேசி எண்களை வாங்கிக் கொண்டார். ஒவ்வொருவருக்கும், ஒரு மிட்டாய் வேறு கொடுத்து அனுப்பினார். இவர்களும் சென்று பெயரைக் கொடுத்துவிட்டு வெளியில் வந்தனர்.


"இவர் கிட்ட டியூஷன் போனா உருப்பட்ட மாதிரி தான்" என்றான் ஷங்கர்.


"அடப்பாவி...... அப்புறம் எதுக்கு டா பேர் எல்லாம் கொடுத்த?"


"உள்ளே வந்துட்டு, பெயர் கொடுக்காம எப்படி இருக்க முடியும்?" என்றான் ஷங்கர்.


"நானும் சேர மாட்டேன்" என்று ஒவ்வொருவராக பின் வாங்கினார்.


"அடப்பாவிகளா.... அவரு வீட்டுக்கு போன் பண்ணினா என்னடா பண்ணறது?" என்று அப்பாவியாகக் கேட்டான் நட்டு.


"அதெல்லாம் பண்ண மாட்டார். நான் எங்க வீட்டு போன் நம்பர் கொடுக்கல"


"பின்ன?"


"நம்ம ஸ்கூல் நம்பர் எழுதிக்கொடுதுட்டு வந்துட்டேன். பேர் கூட மாத்தி கொடுத்துட்டேன்" என்றான் ஷங்கர்.


"அடப்பாவி......."


'டேய், நீ பரவாயில்ல.... நான் என் பேரை மாத்தி, நட்டு வீட்டு போன் நம்பரைக் கொடுத்துட்டேன்" என்றான் கிருஷ்ணா.


"டேய் நாயே...." என்று அவனைத் துரத்தினான் நட்டு.


சிறிது நேரத்திலேயே காற்று பலமாக அடிக்கத்தொடங்கியது. திடீரென்று கார்மேகம் சூழ்ந்து கொண்டது.


"டேய், மழை வர்றதுக்குள்ள சீக்கிரமா எல்லாரும் வீட்டுக்குப் போய் சேர்ந்துடலாம்" என்றான் ஷங்கர். ஆனால், அவர்கள் சிறிது தூரம் செல்வதற்குள் பேய் மழை பிடித்துக்கொண்டது.


மறுநாள் காலை....


வகுப்புகள் வழக்கம்போல் நடைபெறத் தொடங்கின. 'கம்ப்யூட்டர் சைன்ஸ்' வகுப்பிற்கு புதிதாக வந்திருந்த 'ப்ரீத்தி' மிஸ் வகுப்பிற்குள் நுழைந்தார். அவர் பாடம் நடத்திய விதம், அனைவருக்கும் ரொம்பப் பிடித்திருந்தது. அமைதியாகவும் நேர்த்தியாகவும் பாடமெடுத்தார். பொதுவாக, மாணவர்களிடம் உடனே நல்ல பெயரெடுப்பது கடினம். ஆனால், இவர் வந்த முதல் நாளிலேயே மாணவர்களிடம் நல்ல பெயரெடுத்தார்.


'கம்ப்யூட்டர்' வகுப்பிற்கு ஆசிரியர்கள் எல்லாம் திருப்த்தியாக அமைந்திருந்தனர். ஆனால், 'பயாலஜி' வகுப்பில் செல்வம் சார் பூச்சாண்டி காட்டிக் கொண்டிருந்தார். மாணவர்கள் எல்லாம் புலம்பிக்கொண்டிருந்தனர்.


"நிச்சயமா ஏதாச்சும் வீக் பாயிண்ட் இருக்கும் டா" என்றான் ஷங்கர்.


"அதை சீக்கிரமா கண்டு புடிக்கணும் டா.... கிளாஸ் டார்ச்சர் தாங்கல.... திருநெல்வேலி தமிழ் கேள்விப்பட்டிருக்கோம். இவரு, திருநெல்வேலி இங்கிலிஷ்ல பேசி உயிரெடுக்குறார்" என்றான் பாபு.


"சரி, நம்ம முதல் வலையை விரிப்போம். இதுலே விழலேன்னா, அப்புறமா அடுத்தக்கட்ட நடவடிக்கை பத்திப் பேசுவோம்"


"சொல்லு"


"நீ என்ன பண்ணற.... நாளைக்கு அவரைப் பார்த்து, 'நீங்க டியூஷன் எடுக்குறீங்களா சார்' ன்னு கேளு" என்றான் ஷங்கர்.


தொடரும்...

Wednesday, October 22, 2008

'சேட்டை'ய ராஜாக்கள் - 25

+1 வகுப்பு ஆரம்பிக்கின்ற அன்று.... அனைவருக்கும், ஏதோ பள்ளிப்படிப்பையே முடித்து விட்டு, கல்லூரிக்குள் செல்கிற உணர்வு ஏற்பட்டது. 10வது மற்றும் 12வது மாணவர்கள் மீது தான் அனைவரது பார்வையும் இருக்கும். இந்த ஒரு வருடம் தான், இத்தனை வருட பள்ளிப்படிப்பிலேயே சிறந்ததாக இருக்கப்போகிறது. ஸ்பெஷல் கிளாஸ், கோச்சிங் கிளாஸ் என்று அலைக்கழிக்க மாட்டார்கள். விடுமுறைகள் எல்லாம் தாராளமாகக் கிடைக்கும். ரொம்ப கஷ்டப்பட்டு படிக்கத் தேவை இல்லை. இப்படி, பல சௌகரியங்கள் இருப்பினும், இந்த வருடம் முதல், "பயாலஜி" , "கம்ப்யூட்டர் சைன்ஸ்" என்று இரு வேறு பிரிவுகளாக வகுப்புகள் பிரிக்கப்பட்டதால், நண்பர்களை விட்டுப் பிரிகிறோமே என்கிற நெருடல் அனைவருக்கும் இருக்கத்தான் செய்தது.


நட்டு,பாபு மற்றும் பாலா ஆகியோர் "பயாலஜி" வகுப்பிலும், ஷங்கர், குமார் மற்றும் கிருஷ்ணா ஆகியோர் "கம்ப்யூட்டர்" வகுப்பிலும் இருந்தனர்.


"என்ன 10 கிலோமீட்டர் தள்ளியா இருக்கப் போறோம்? எட்டிப்பார்த்தா உன் மூஞ்சி தெரியப்போகுது..." - பாபுவிடம் சொன்னான் கிருஷ்ணா.


"இருந்தாலும், நம்ம எல்லாரும் ஒரே க்ளாஸ்- இருக்குற மாதிரி வருமா?" என்றான் பாபு.


"ஏதோ, நமக்கும் டாக்டர் சீட்டு கிடைக்கும்னு ஒரு குருட்டு நம்பிக்கையில பயாலஜி எடுத்திருக்கோம்..... பாப்போம்" என்றான் பாபு.


"டேய், இந்த 'டாக்டர்' கனவு எல்லாம் சொல்லி உங்க வீட்டுல எல்லாரையும் ஏமாத்தலாம். என்னை ஏமாத்த முடியாது. நீ ரூபி மிஸ்சுக்காக தான் "பயாலஜி" குரூப் எடுத்திருக்கன்னு எனக்கு தெரியும்" என்றான் ஷங்கர்.


இப்படிப் பேசிக்கொண்டே பள்ளியை வந்தடைந்தனர். பள்ளியைப் பார்த்ததும், பத்தாம் வகுப்பு தேர்வு முடித்து விட்டு, அனைவருமே வேறு பள்ளிக்கு மாறிவிடுவது போல, "இன்று தன் கடைசி நாள் என்று அனைவரும் வகுப்பின் ஒவ்வொரு மூலையிலும் நின்று ஓவராக பீல் பண்ணிய காட்சி, ஒரு " ஃப்ளாஷ் பேக்" போல ஓடியது.


"கடைசியில எங்கேயும் போகல.... அதே ஸ்கூல், அதே மேடம், அதே மாஸ்டர்... ஹும்ம்...." என்று அலுத்துக்கொண்டான் ஷங்கர்.


"தேவையில்லாம, ஓவரா ஃபீல் பண்ணிட்டோமோ?" என்றான் குமார்.


புதிய வகுப்புகள் எங்கு இருக்கிறதென்று தெரியாமல் தேடிக்கொண்டிருந்தனர்.


அப்போது, பின்னாலிருந்து யாரோ பாபுவை அழைக்கும் சப்தம் கேட்டது. பாபு பின்னால் திரும்பிப்பார்க்க, அங்கு பாலாஜி நின்றுகொண்டிருந்தான்.


"யாரு டா அது? நேதாஜியா, பாலாஜியா?" என்று குழம்பினான் பாபு.


பாபு மட்டுமல்ல. பள்ளியில் அனைவருமே குழம்புவார்கள். காரணம், நேதாஜியும் பாலாஜியும் இரட்டைப் பிறவிகள். பார்ப்பதற்கு அச்சு அசலாக ஒரே மாதிரி இருப்பார்கள். இந்த குழப்பத்தை தவிர்பதற்காகவே, +1ல் இருவரையும் வெவ்வேறு வகுப்பில் அமர்த்தப்போவதாக மேடம் அடிக்கடி கூறிக்கொண்டிருப்பார்.


பாபு அவனருகே சென்றான். யார் என்று சரியாக யூகிக்க முடியாததால், அவன் முதலில் வாயைத்திறக்கட்டும் என்று காத்துக்கொண்டிருந்தான்.


"நீயும் பயாலஜி தானே? நானும் அதே குரூப் தான். நேதாஜி தான் கம்ப்யூட்டர் சைன்ஸ்" என்றான்.


அப்போது தான் அவன் பாலாஜி என்று விளங்கியது. வகுப்புகள் "கிரௌண்டில்" இருப்பதாகக் கூறி, அனைவரையும் அங்கு அழைத்துச் சென்றான்.


பள்ளியின் மைதானத்தை, கொஞ்சம் கொஞ்சமாக ஆக்கிரமிப்பு செய்து, அதில் வகுப்பறைகளைக் கட்டியிருந்தனர். கிடைத்த இடங்களிலெல்லாம் வகுப்பறைகளைக் கட்டியதில், விடுபட்ட கொஞ்ச இடத்தை விளையாட்டு மைதானமாக பயன்படுத்திக் கொண்டிருந்தனர். இப்படி, மைதானத்தையொட்டி இருக்கும் வகுப்புகளைக் குறிக்கும் பொது, "கிரௌண்ட்" என்று பொதுப்படையாகவே குறிப்பிடுவது வழக்கம்.


நீளவாக்கில் அமைக்கப்பட்டிருந்த கீற்றுக் கொட்டகையில், வரிசையாக வகுப்புகள் இருந்தன. ஒவ்வொரு வகுப்பையும் பிரிப்பது, "ஸ்க்ரீன்" என்று சொல்லக்கூடிய, மெல்லிய கார்டுபோர்டினால் செய்யப்பட்ட தடுப்பு மட்டுமே.


அன்று முதல் நாள் என்பதால், மாணவர்கள் அனைவரும் உற்சாகமாக இருந்தனர். +1 வகுப்புகள் அனைத்தையும் அன்று தனித்தனி வகுப்பில் அமர்த்தாமல், ஒரே வகுப்பாக அமர்த்திருந்தனர். பார்த்துப் பழகிய முகங்களின் நடுவே, ஒரு சில புதிய முகங்களும் தெரிந்தன. அவர்கள், புதிதாக பள்ளிக்கு வந்து சேர்ந்தவர்கள் என்று பார்த்த உடனேயே விளங்கியது.


"பயாலஜி", 'கம்ப்யூட்டர் சைன்ஸ்" தவிர, "ப்யூர் சைன்ஸ்" என்று ஒரு வகுப்பு தனியாக இருந்தது. பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் மிகக்குறைந்த மதிப்பெண் பெற்றவர்கள், அந்த வகுப்பில் இருந்தார்கள்.


பள்ளியில் பெரும்பாலும் பெண்களே ஆசிரியர்களாக பணிபுரிந்து கொண்டிருந்தார்கள். கடந்த 10 ஆண்டுகளில், இரெண்டு ஆண் ஆசிரியர்கள் பணிபுரிந்திருந்தால் பெரிய விஷயம். அப்படி இருக்கையில், அந்த வருடம் பள்ளியில் புதிதாக ஆண் ஆசிரியர்கள் சேர்ந்திருப்பதாக பேச்சு நிலவியது. அதை உண்மையாக்கும் வகையில், அங்கே ஆசிரியர் ஒருவர் வந்தார்.


முழு கை சட்டையும், அதை 'இன்' செய்து, நெஞ்சிற்கு கொஞ்சம் கீழே 'பேன்ட்'டும் அணிந்திருந்தார். மூக்கிற்கு கீழே, ஒல்லியான கம்பிளிப்புச்சியைப் போன்ற மீசையுடன், நகைச்சுவையாகத் தோற்றமளித்தார். தன் பெயர் செல்வம் என்றும், தான் 'ஃபிசிக்ஸ்' வாத்தியார் என்றும் அறிமுகப்படுத்திக் கொண்டார்.


"பார்க்க காமெடியாத்தான் இருக்காரு, போகப் போகத்தான் தெரியும்" என்று கிசுகிசுத்தனர்.


புதிதாகப் பள்ளியில் சேர்ந்தவர்களை எழுப்பி, அவர்களையும் அறிமுகப்படுத்திக் கொள்ளுமாறு கூறினார். அறிமுகப் படலம் எல்லாம் முடிந்தது. பாடம் எதுவும் நடத்தப்படாததால், இரைச்சல் சத்தம் அதிகமாகக் கேட்டது. அங்கு நின்றிருந்த ஆசிரியர் பற்றி கவலைப்படாமல், அனைவரும் அரட்டை அடித்துக் கொண்டிருந்தனர்.


அப்போது, திடீரென்று அனைவரின் கவனமும், செல்வம் சாரின் மீது திரும்பியது. எதற்காகவோ ஒரு மாணவனை திட்டிக்கொண்டிருந்தவர், அந்த மாணவனும் எதிர்த்துப் பேசவே, கடும் கோபத்துடன் அவர் அமருவதற்காக போடப்பட்டிருந்த நாற்காலியை எடுத்து, அவன் மீது வீசினார். நல்லவேளையாக அது யார் மீதும் படவில்லை. இப்படி ஒரு காட்ச்சியை யாருமே எதிர்ப்பார்த்திராததால், அனைவருக்கும் அதிர்ச்சியாக இருந்தது. வந்த முதல் நாளிலேயே இப்படி அவர் நடந்து கொண்டது, பலருக்கு அவர் மீது அச்சத்தை வரவழைத்தது.


அவர் நாற்காலியை வீசி எறிந்ததையும் பொருட்படுத்தாமல், அந்த மாணவன் எதிர்த்துப் பேசிக்கொண்டிருக்க, அவர் வகுப்பை விட்டு வெளியேறினார். நேராக மாஸ்டரிடம் புகார் செய்வதற்காகக் கிளம்பினார். அவ்வளவு இரைச்சலாக இருந்த இடம், திடீரென்று அமைதிப்பூங்காவாக மாறியது. செல்வம் சார் தங்கள் வகுப்பிற்கு வந்துவிடக்கூடாது என்று அனைவருமே வேண்டிக்கொண்டனர். அவர் உருவத்தைப் பார்த்து, அவரை லேசாக எடை போட்டவர்கள் எல்லாம், தங்கள் எண்ணத்தை அந்த நொடியிலேயே மாற்றிக்கொண்டனர்.


குமார் : "டேய், இவரு காமெடியா, டெரரா?"


ஷங்கர் : "தெரியலயேப்பா....."

(டங்...ங்....ங்....ங்)


தொடரும்....

Tuesday, October 14, 2008

'சேட்டை'ய ராஜாக்கள் - 24

ஷங்கர், அவன் பிடித்த பிடியில் உறுதியாக இருந்தான். என்னதான் ஷங்கர் கூறும் காரணங்கள் ஞாயமாகப் பட்டாலும், யாருக்கும் பள்ளியை மாற்றுவதில் உடன்பாடு இல்லை. முடிந்தவரையில் பேசி சமாதானப்படுத்தலாம் என்று நினைத்திருந்தனர்.+1 வகுப்பிற்கான விண்ணப்பங்கள் அனைத்து பள்ளிகளிலும் கொடுக்க ஆரம்பித்திருந்தார்கள்.

பத்தாம் வகுப்பு தேர்வு மதிப்பெண் பட்டியலை பள்ளியில் வாங்கிக்கொண்டு, அனைவரும் நேராக பாபு வீட்டிற்கு சென்றனர்.


ஷங்கர் : டவுன் ஹை ஸ்கூல்ல அப்ளிகேஷன் வாங்கப்போறேன். யாருக்கெல்லாம் வேணும்?


பாபு : டேய், எதுக்கு டா இப்போ ஸ்கூல் மாத்தணும்னு அடம் புடிக்கிற?


ஷங்கர் : பத்தாவது படிக்கும் போதே இவ்வளவு பாடு படுத்துனாங்க. இன்னும் +2 போனா அவ்வளவு தான். இது தான் கடைசி சான்ஸ். இதை விட்டா, இன்னும் ரெண்டு வருஷம் இங்கே தான் குப்பை கொட்டணும்.


பாபு : இனிமே வேற ஸ்கூலுக்கு மாறி, அங்கே எல்லார்கிட்டயும் பழகி....


ஷங்கர் : டேய், நீங்களே சொல்லுங்க டா.... இந்த ஸ்கூல்- நம்மள என்னைக்காவது 10வது படிக்கிற பசங்க மாதிரி நடத்திருக்காங்களா? என்னமோ நாலாவது படிக்கிற பசங்க மாதிரி தான் நடத்துறாங்க.


குமார் : அது சரி தான் டா, ஆனா இங்கே எல்லா டீச்சர்சையும் தெரியும், நல்லா பழகியாச்சு....


ஷங்கர் : அங்கேயும் போய் பழகிடலாம்....


பாலா : எங்க வீட்ல ஒத்துக்க மாட்டாங்க டா...


ஷங்கர் : நீங்க யாருமே வரலேன்னா கூட, நான் நிச்சயமா மாறப்போறேன். இன்னும் ரெண்டு வருஷம், வெறும் படிப்பு படிப்புன்னு பைத்தியமாக்கிருவாங்க. ஒரு 'ஆனுவல் டே' கூட நடக்கல. என்ன ஸ்கூல் டா இது?


பாபு : அடுத்த வருஷம் நிச்சயமா 'ஆனுவல் டே' இருக்கும். நம்ம மேடம் கிட்ட பேசலாம்.


ஷங்கர் : வருஷ கடைசியில வர்ற 'ஆனுவல் டே'க்காக, வருஷம் பூரா டார்ச்சர் அனுபவிக்கணுமா? அப்படியே அது நடந்தாலும், சினிமா பாட்டு பாடக்கூடாது, அது, இதுன்னு உயிரெடுப்பாங்க.


குமார் : டேய், அடுத்த வருஷம் நம்ம ஸ்கூல்- நிறைய ஆக்டிவிடீஸ் பண்ணலாம் டா...


ஷங்கர் : ஒரு ம**ம் பண்ண முடியாது. வாரத்துக்கு ஒரு தடவை திருச்சியில இருந்து ஒருத்தன் கிட்டாரைத் தூக்கிட்டு வருவான். அவன் சர்ச்- வந்து மொக்கை போடறதை கேக்கலாம். அது தான் அங்க நடக்குற உச்சக்கட்ட ஆக்ட்டிவிட்டி..


மறுநாள்....ஷங்கர் வீடு.


ஷங்கர், ‘டவுன் ஹை ஸ்கூல்’ பள்ளியின் விண்ணப்பத்தை நிரப்பிக்கொண்டிருந்தான். குமார் அங்கு வந்தான்.


குமார் : இந்தா, இதையும் ஃபில் பண்ணு. (அவர்கள் பள்ளியின் விண்ணப்பத்தை கொடுத்தான்)


ஷங்கர் : நான் தான் ஸ்கூல் மாறப்போறேன்னு அப்போவே சொன்னேனே. எனக்கு இந்த அப்ளிக்கேஷன் வேண்டாம்.


குமார் : டேய், நான் சொல்லற விஷயத்தை முதல்ல கேளு. அப்புறம் நீயே முடிவு பண்ணிக்கோ.


ஷங்கர் : .......


குமார் : நேத்து நீ அப்படி சொல்லிட்டுப் போன உடனேயே, பாபு ஸ்கூலுக்குப் போய் லீலா மிஸ் கிட்ட பேசியிருக்கான். அடுத்த வருஷம் நம்ம ஸ்கூல் சார்புல நிறைய போட்டிகள்ல கலந்துக்க, +1 பசங்களை அனுப்பப்போறாங்களாம். அது மட்டும் இல்ல, நம்ம ஸ்கூல்லயே சிலஈவன்ட்ஸ்’ நடத்த ப்ளான் வெச்சிருக்காங்களாம்.


ஷங்கர் : என்ன? ஜெபக்கூட்டம் நடத்தப்போறாங்களாமா? காதுல பூ.....


குமார் : நான் கூட முதல்ல நம்பல. இந்த திடீர் மாற்றத்துக்கு காரணம், ARR ஸ்கூல் இருந்து நம்ம ஸ்கூலுக்கு வந்திருக்குற ஹில்டா மேடம் தான். அவங்க தான் இப்போ புது வைஸ்-பிரின்சிபால்.


ஷங்கர் : ............


குமார் : நீ மட்டும் தனியா போய் என்னடா பண்ணுவ? பேசாம வா... நாங்க யாருமே இன்னும் அப்ளிக்கேஷன் போடல.... உனக்காக தான் வெயிட் பண்ணறோம்....


ஷங்கர் : ............


குமார், காத்துக்கொண்டிருந்தான். சிறிது நேரத்திற்குப் பிறகு, குமார் கொடுத்த விண்ணப்பத்தை எடுத்து, நிரப்பத்தொடங்கினான்.


பாபு,நட்டு,பாலா ஆகியோர் 'பயாலஜி'பிரிவை எடுத்திருந்தனர். மற்ற மூவரும், "கம்ப்யூடர்" பிரிவை எடுத்திருந்தனர். விண்ணப்பத்தில், பெற்றோர் கையெழுத்து அவசியம் தேவை. ஆனால், ஷங்கரின் பெற்றோர் ஊரில் இல்லாததால், அவன் இரெண்டு நாள் கழித்து விண்ணப்பிப்பதாகக் கூறினான்.


குமார் : அதெல்லாம் வேண்டாம். உங்க அப்பா கையெழுத்து இல்லேன்னா என்ன? நீயே போடு.


ஷங்கர் : டேய்......இதெல்லாம் ரொம்ப ஓவர்.


குமார் : நீ எப்போ டா இவ்வளவு நல்லவன் ஆன?? இதெல்லாம் நமக்கு சகஜமாச்சே..


ஷங்கர் : அப்படி என்னடா அவசரம்?


குமார் : டேய், இந்த வருஷம் வேற ஸ்கூல் பசங்க நிறைய பேரு நம்ம ஸ்கூலுக்கு வர்றாங்க. எதுக்கு வம்பு? நமக்கே சீட் இல்லாம போச்சுன்னா?


ஷங்கர் : பெரிய ஆக்ஸ் ஃபோர்டு யுனிவெர்சிடி......சீட் கிடைக்காம போறதுக்கு.


குமார் : நம்ம ஊருக்கு இது தான் டா ஆக்ஸ் ஃபோர்டு. இந்த டப்பா இங்கிலீஷைக் காட்டி டபாய்ச்சிக்கிட்டு இருக்காங்க.


(கேட் திறக்கும் சத்தம் கேட்டது)


ஷங்கர் : யாருன்னு பாரு....


கிருஷ்ணா, நட்டு, பாபு, பாலா எல்லாம் சேர்ந்து வந்தனர். அனைவரிடமும் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் இருந்தன.


ஷங்கர் : எல்லாரும் ஒரு முடிவோட தான் வந்திருக்கீங்களா?


கிருஷ்ணா : ஆமா டா....இப்போவே நம்ம எல்லாரும் சேர்ந்து போய் குடுத்திருவோம்...


ஷங்கர் : எங்க அப்பா கிட்ட சொல்லவே இல்ல டா... நானே எங்க அப்பா கையெழுத்து போட்டுட்டேன்.


கிருஷ்ணா : சரி, போன் பண்ணி சொல்லிடு. சிம்பிள்….


பள்ளி நுழைவுவாயில்....


ஏகப்பட்ட கூட்டம் அலைமோதிக்கொண்டிருந்தது. அனைத்து வகுப்புகளுக்கும் மாணவர் சேர்க்கை விறுவிறுப்பாக நடைபெற்றுக்கொண்டிருந்தது.


ஒரே ஒரு கம்பிகளால் அடைக்கப்பட்ட ஜன்னல், அதில் ஒருவர் மட்டுமே கை நுழைக்கக்கூடிய அளவில் ஒரு ஓட்டை. இது தான் ஒட்டு மொத்த பள்ளியின் "ஸ்டோர்ஸ்" மற்றும் "ஆபீஸ் ரூம்". 50 பைசாமேப்’ வாங்க வேண்டுமென்றாலும் சரி, சேர்க்கைக்கான கட்டணம் செலுத்த வேண்டுமானாலும் சரி, LKG முதல் +2 வரை, அனைவரும் அங்கு தான் வர வேண்டும். அங்கு இருந்த நீண்ட வரிசையில் நின்று பணம் செலுத்திவிட்டு, அந்த ரசீதை பெற்றுக்கொண்டனர். விண்ணப்பங்களை, ஒருவர் பின் ஒருவராக மேடத்தை நேரில் பார்த்து தான் கொடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது.


ஒவ்வொருவரும் மேடத்தின் அறைக்குள் சென்று விண்ணப்பத்தைக் கொடுத்துவிட்டு வந்தனர். ஷங்கரின் முறை வந்தது. அவன் உள்ளே சென்றான்.


பாபு : நம்ம போட்ட 'பிட்டு' நல்லா வொர்க்-அவுட் ஆயிருக்கு போல இருக்கு?


குமார் : ஆமா டா... அவனை நம்ப வைக்கிறதுக்குள்ள..... யப்பா.....


பாபு : ஒரு வழியா அவன் மனசை மாத்தியாச்சு....


குமார் : டேய், நம்ம இப்படி கலர் கலரா ரீல் விட்டது தெரிஞ்சா முதல்ல என்னை தான் டா அடிப்பான்....


பாபு : பாத்துக்கலாம்....


ஷங்கர், வெளியில் வந்தான்.


பாபு : என்னடா, குடுத்துட்டியா?


ஷங்கர் : மேடம், என்னை பயாலஜியில சேர சொன்னாங்க.எங்க அப்பா மாதிரி நான் டாக்டருக்கு படிக்கணுமாம்.


பாபு : அய்யய்யோ....நாடு தாங்காது.


ஷங்கர் : டேய், உன்ன மாதிரி ரூபி 'மிஸ்'ஸை சைட் அடிக்கிறதுக்காக நான் பயாலஜி குரூப் எடுக்க முடியுமா? எனக்கு அதுல உண்மையிலேயே இன்ட்ரெஸ்ட் இல்ல... எங்க அப்பா சம்மதத்தோட தான் நான் கம்ப்யூட்டர் குரூப் எடுக்குறேனான்னு கேட்டாங்க. நான் ஒரே ஒரு வார்த்தை சொன்னேன், உடனே சரின்னு என் அப்ளிகேஷனை வாங்கிட்டாங்க.


பாபு : என்னடா சொன்ன?


ஷங்கர் : (தலைவர் ஸ்டைலில்)உண்மையை சொன்னேன்.....


அடுத்த பதிவில்.... +1 சேட்டைகள் ஆரம்பம்.